கோவிந்த் நிகாலானியுடன் ஒரு கலந்துரையாடல்
- by நடிகர்-ரேவதி-அருண்மொழி
- 01 December 2019
இந்தி பேசும் சினிமாவில் வியாபார நிமித்தங்களை மட்டுமே முழு நோக்கமாகக் கொண்டு பல திரைப்படங்கள் எடுத்து வருகிறார்கள் என்பது உண்மை. காலங்காலமாக இந்தி சினிமாவில் இந்த போக்கை அதிக அளவில் நிர்ணயிப்பது அதிகமான செலவு. ஆனால் இதற்கிடையில் ஓர் அர்த்தமுள்ள திரைப்படத்திற்கான முயற்சி செய்தவர்களில் மிக முக்கியமானவர் கோவிந்த் நிகலானி. இவரது பூர்வீகம் கராச்சி , பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிலேயே தங்கிவிட்ட குடுபங்களில் ஒன்று இவருடைய குடும்பம்.
இவர் திரைப்பட இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிய பலபடங்கள் இந்தி சினிமாவில் மைல்கற்களாக இன்றும் போற்றப்படுகின்றனர்.
இவர் ஷ்யாம் பெனகளுக்காக ஒளிபதிவு செய்திருந்த ‘ஆங்கூர்’ , ‘நிஷாந்த்’, ‘பூமிகா’, ‘ஜுனூன்’ போன்றவை மிகவும் குறிப்பிடத்தகுந்த படங்களாகும். குறைந்த பட்ஜெட்டில் நவீன நாடக நடிகர்களைக் கொண்டு, மிக அபூர்வமான நுண்ணிய உணர்வுககுக்கு மரியாதையளித்து, யதார்த்தமான திரைக்கதை பாணியில் ‘ ஆக்ரோஷ்’, ‘அர்த் சத்யா’, ‘தரோகால்’ (தமிழில் குருதிபுனல்) போன்ற படங்கள் புதிய பாதையை வகுத்துத் தந்த திரைப்படங்கள். ஒளிபதிவுத் துறையில் பயிற்சி பெற்று, திரைப்பட மேதைகளில் ஒருவரான வி.கே.மூர்த்தியுடன், குருதத் திரைப்படங்களில் பணியாற்றிய வாய்ப்பையும் பெற்ற கோவிந்த், சத்யம் திரையரங்கில் நடைபெற்ற லைட்ஸ் ஆன் நிகழ்வில் கலந்து கொண்ட நிகலானி நடிகை ரேவதி வழி நடத்த, பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.
“திரைப்பட வரலாற்றின் பல கட்டங்களிலும் எழுத்தாளர்கள், நடிகர்கள், படத்தொகுபாளர்கள், தயாரிப்பாளர்கள் என்றும் பலரும் இயக்குனராக மாறுவது இயல்பு – ஒளிபத்திவாளர்கள் இயக்குனராக மாற்றம் பெறுவதும் அப்படியே” என்று ஆரம்பித்த தொகுப்பாளர் நடிகை ரேவதி, மிக சுவாரசியமான முறையில் நிகழ்வைத் தொடங்கினார். தான் முன்பே பார்க்க நிகழ்ந்த ஒரு நேர்காணலின்பொழுது, கோவிந்த் நிகலானி திரைப்படத் துறைக்கான படிப்பை மேற்கொள்வதற்கு வீட்டிலுள்ள பெரியவர்கள் பார்த்த ஜாதகம் மிகவும் கை கொடுத்து உதவியது என்று கூறியிருந்தார். ‘இது எந்த அளவிற்கு உண்மை’ என்றவுடன், கோவிந்த் வெட்கம் கலந்த சிரிப்புடன், “எங்கள் குடும்ப குருவான ஒரு மிக்கிய நபர் 1962 வாக்கில் எனக்கு ஆதரவாக சொல்லிய இந்த ஜாதகம் எனது வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது” என்றவர், தன்னை பொறியியலாளராக உருவாக்க வேண்டுமென தனது தந்தை மிகவும் விரும்பியதையும் அதே சமயம் ஒளிப்பதிவு பற்றிய ஒரு சிறு விளம்பரம் பார்க்க நேர்ந்தபொழுது உடல் முழுவதும் ஏற்பட்ட ஓர் இனம்புரியாத சிலிர்ப்பு உருவானதையும் கூறினார். தான் படிக்க சேர்ந்த பெங்களூர் பிலிம் இன்ஸ்டியூட்டில் ஒளிப்பதிவுத் துறையில் நல்ல திறமைமிக்க ஆசிரியர்கள் பலர் இருந்ததையும், ஆனால் தகுந்த தொழில் நுட்ப சாதனங்கள் போதிய அளவு இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும், என்றார்.
தான் திரைப்படக் கல்லூரியில் பயின்று வெளியே வந்ததும் உதவியாளராக சேர்ந்து பணிபுரிய வேண்டுமென விரும்பிய மிகப் பெரிய கேமராமேன் திரு.வி.கே.மூர்த்தி. அவர் குருதத்துடன் இணைந்து பணிபுரிந்த கருப்பு வெள்ளைப் படங்கள் பலவும் திரைகாவியங்களாக இன்றும் போற்றப்படத்தக்கவை. குறிப்பாக, குருதத்தின் ‘பியாசா’. அதில் மூர்த்தி சார் செய்திருந்த ஒளி அமைப்பு, பிம்ப அமைப்புகள் என்று அனைத்தும் காவியத்தன்மை மிகுந்த அற்புதங்கள் என்று சொல்லும் பொழுதே கோவிந்த் நெகிழ்ந்தார். குருதத்துக்கும், மூர்த்தி சாருக்கும் இடையே இருந்த நல்லிணைப்பு அற்புதமான படைப்புகளை வழங்கியதுடன், ஒர் உதாரணத் தன்மை கொண்ட குழுவாகவும் விளங்கியதை நினைவு கூர்ந்தார். மிகபெரிய உருவம் கொண்ட மிட்செல் (mitchell) கேமராவின் கோணம் பார்க்கும் கருவி (view finder) படம் பிடிக்கும் லென்சிலிருந்து சிறிது தள்ளி இருந்ததினால் ஏற்படும் தோற்றப்பிழையைத் (paralex error) திறமையான கற்பனை கலந்த கணக்குடன் செய்து பழகிய படப்பிடிப்பு நாட்களை விவரித்துக் கூறினார்.
கோவிந்த் நிகலானி ஒளிப்பதிவு செய்த முதற் படத்தில் முதல் ஷாட் அனுபவத்தைப் பற்றி கேட்கப்பட்டபொழுது தனது முதல் படம் கருப்பு வெள்ளையில் ‘சத்யதேவ் துபே’ இயக்கத்தில் நடந்ததையும் அவர் நாடகதுறையிளிருந்து திரைப்படத்திற்கு வந்திருந்தவர் என்பதால் தனக்கும் அவருக்கும் முதல் நாளில் நடைபெற்ற சண்டையைக் கூறினார். “மௌனம்! கோர்ட்...” (silence! court in session) என்ற திரைப்படம் பலமுறை மராத்திமொழியில் நடத்தப்பட்ட நாடகத்தின் மறுவடிவம். இதன் இயக்குனர் ‘சத்யதேவ்’ மராத்திய அரங்கத்தில் பெயர்பெற்றார். இருந்தாலும் திரைபடம் இயக்க வந்தவர் முதல் ஷாட்டை விவரித்து கூறாமல், நான் நடிகர்களை அதில் நிறுத்தி எடுத்துக் கொள்கிறேன் என்று பொத்தாம் பொதுவான பாணியில் கூறியதும், கோவிந்த் ‘அது எப்படி முடியும்? நீங்கள் நடிகர்களை வைத்து ஒரு முறை நடித்து காண்பித்தால், நான் ஒழி அமைக்கும் திட்டத்தையும், அதன் வடிவபாணியையும் நெறிபடுத்த இயலும்’ என்று கூறிய வண்ணமே இருந்தார். ‘இது எங்களுக்குகிடையே ஒரு பிரிதலின்மையை உருவாக்கியது...இது அவ்வப்பொழுது படப்பிடிப்பின் இடையேயும் நடந்தது. 1969 வாக்கில் அந்த பிரம்மாண்டமாக மிட்செல் கேமராவைக்கொண்டு வேலை செய்த பொழுது ‘gone with the wild’ போன்ற காவியமான படங்கள் எடுக்க பயன்படுத்திய கேமராவை தானும் உபயோகிக்கிறோம் என்ற பெருமை, சிறிதளவு எனக்குள்ளும் ஓடியது. அதைவிட, ஒளியின் அளவைத் தீர்மானிக்க பயன்படுத்துகின்ற லைட் மீட்டர் (exposure meter) என்னிடம் சொந்தமான அந்த நாட்களில் கிடையாது. கருப்பு வெள்ளையில் எடுக்க இந்த அளவுமானி கருவி மிகவும் அவசியம், அதனால் இதனை மூர்த்தி சார் கொடுத்து உதவினார். சத்யதேவ் படத்திற்கு நான் உபயோகித்த இந்த லைட் மீட்டரை இந்தி சினிமாவில் காவியப்படங்களான ‘காகச்கிபூல்’, ‘பியாசா’ போன்றவற்றிற்கு பயன்படுத்தினார்” என்றார் கோவிந்த். மிகவும் பிரபலமான ‘நடராஜ் ஸ்டுடியோ’ வில் எனது முதல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. நான் செய்த இன்னொரு கருப்பு வெள்ளை படம் கிரீஷ்கர்னாட் இயக்கிய ‘காடு’. பிறகு ஷியாம் பெனகலின் “பூமிகா” திரைப்படத்தில் சில காட்சிகள் கருப்பு வெள்ளையில் எடுக்க தீர்மானித்து அப்படியே எடுத்தோம். தான் இது வரை டிஜிட்டல் அல்லது வீடியோ ஒளிப்பதிவு செய்ய நேர்ந்ததே இல்லை என்றும் திரைப்படத்தின் அற்புத பிமபங்களின், வெளிப்பாட்டு வண்ணங்களின், தன்மைக்கு முன்னால் வீடியோ/டிஜிட்டல் இணையில்லை என்று நம்புவதாகக் கூறினார்.
கோவிந்த், ஷியாம் பெனகலைப் பற்றி, ‘மிகவும் படித்தவர், பொருளாதாரம், சரித்திரத்தை சிறப்புப் பாடமாக எடுத்து படித்திருந்தாலும் எந்த ஒரு நிகழ்வையும் தனிமை குணத்துடன் பாராமல் ஒரு மனிதாபிமான அடிப்படையில் மார்க்சிய பார்வை இணைந்து பார்ப்பதினால் பன்முகத் தன்மை கொண்ட ஆழம் மிகுந்த கதாபாத்திரங்களை அவரால் படைக்க முடிந்தது’என்றார். மேலும், தான் ஷியாம் பெனகலின் பெரும்பாலான திரைக்கதைகளின் வளர்ச்சியின் பொழுது கூடவே இருந்த அனுபவம் பெற்றது, தான் இயக்குனராக மாற்றம் பெற்ற பொழுது மிகவும் உதவியுள்ளத்தை விளக்கினார். தனது ‘tamas’ என்ற நீண்ட ஐந்து மணி நேர படத்தை எடுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பொழுது தனது குடும்பம் பிரிவினை நாட்களில் அனுபவித்த ஆழமான காயங்களின் நினைவுகள் அப்படத்தில் பிரதிபலித்ததையும் நினைவு கூர்ந்து பேசினார்.
நடிகை ரேவதி தான் பார்த்த ஜுனூன் படத்தில் சஷிகபூர் மிகவும் அழகாக காட்டப்பட்ட முறைக்கு கோவிந்தைப் பாராட்டினார். ஹன்ஸாவாட்கர் என்ற மராத்தி நடிகையின் வாழ்க்கை சரிதையை பின் புலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட “bhumika” படத்தில் கோவிந்த் பயன்படுத்திய வித்தியாசமான திரைப்பட கச்சாபொருட்கள் எப்படி ஒரு காலக்கட்டத்தைப் பிரதிபலிக்க பயன்படுத்தப்பட்டது என்பதை தொழில் நுட்ப கண்ணோட்டத்தில் விளக்கினார்.
ரிச்சர்டு அட்டன்பரோவின் “காந்தி” திரைப்படத்தின் இரண்டாவது யூனிட் கேமராமேனாக பணியாற்றிய பொழுது அவர்களின் திட்டமிடுதல் பற்றிய நடவடிக்கைகளை அனுபவித்து பேசினார். சிறந்த நடிகருமான அட்டன்பரோ சிறு அசைவுகளையும் முன்பே திட்டமிடுவதில் இருந்த நுட்பமான குணங்களை சுட்டிக்காட்டினார். மஞ்சுளா பத்மநாபன் எழுதிய நாவலின் அடிப்படையில் அமைந்த “தேசம்” திரைப்படம் கோவிந்தின் மற்ற படங்களிலிருந்து வித்தியாசப்பட்டதையும், சமுதாய நலன் இணைந்த விஞ்ஞான திரைப்படம் (science fiction) என்று குறிப்பிட்டார். எழுத்தாளரின் வாசனங்களை அப்படியே பயன்படுத்தும் அளவிற்கு மிகவும் சிறப்பாக எழுதியிருந்ததை குறிப்பிட்டார்.
2022 இல் நடப்பதாக காண்பிக்கப்பட்ட ‘தேகம்’ படத்தின் கட்சிகள் பலவும் இன்னும் சில ஆண்டுகளிலேயே நடைபெறக்கூடிய அபாயத்தை நமது நாடு நெருங்கிக்கொண்டுள்ளது என்ற பார்வையாளர்களின் எண்ணத்தை பிரதிபலித்தார்.
கோவிந்த் திரைப்படத்துறையின் பல்வேறு துறைகளிலும் பயின்று வெளிவரவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். முப்பது ஆண்டுகளுக்கு பின்பும், இப்படியே எண்ணுகிறீர்களா? அல்லது அவரவர்கள் தங்களது சிறப்புப்பாடங்களை மட்டும் கவனம் எடுத்து படித்தால் போதுமானதா? என்று சந்தேகத்தை எழுப்ப ... தான் இப்பொழுதும் முன்பு நினைத்து செயல்பட்டதையே சரியென்று நம்புவதாகக் கூறினார்.
ஒரு பெரிய திரைப்படத்தை முடித்தபிறகு எப்படி அதிலிருந்து மீட்டேத்துக்கொண்டு அடுத்த பணியில் இறங்க முற்படுகிறீர்கள்? என்ற கேள்விக்கு.
பெரிய வேலையை முடித்தபிறகு தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் படுத்து நன்றாக தூங்குவேன் அல்லது சில சமயங்களில் புத்தகங்களைப் படிப்பேன், என்று சிரித்தவாறே பதிலளித்தார்.
அடுத்து, “தேவ்” என்ற உங்களது சமீபத்திய படத்தில் அமிதாப் பச்சன் தேவை இல்லை என்றும், உங்களது தனித்தன்மை முந்தைய படங்களில் காணப்படாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம் என்றும் கேட்கப்பட்ட பொழுது, கோவிந்த் ‘தான் அப்படி நினைக்கவில்லை என்றும் அமிதாப் சரியாக பொருந்தி வந்துள்ளார் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் கூறினார்.
உங்களது பல படங்களில் வன்முறை என்பது அடிநாதமாக இயங்குவது தொடர்ந்து நடைபெறும் செயல் படமாக அமைய, உங்களது குழந்தை பிராயத்து பிரிவினை சம்பவங்கள் காரணமாக இருக்குமா? என்று ஆர்.வி.ரமணி கேட்க, ‘வன்முறையை நான் எப்படி படத்தில் சித்தரித்து காட்டியுள்ளேன் என்று பார்க்க வேண்டும், வன்முறையை நான் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம் என்றார். எதிர்கால சினிமாவில் வன்முறையையும், செக்ஸ்சையும் தவிர்க்க இயலுமா? என்று கேட்கப்பட்டபோழுது, ‘வாழ்க்கையின் ஓர் அம்சமாக இது மாறிவிட்டது’ என்று கோவிந்த் பதில் அளித்தார்.
கேள்வி நேரத்திற்கு நடுவில், மேற்கத்திய ஐரோப்பியசினிமா விமர்சகர்கள் இந்திய சினிமாவின் மீது வைத்த மதிப்பீடுகளை சார்ந்தே பல கலைப்படங்கள் எடுக்கப்பட்டன. பாடல்கள், சண்டைகள், நகைச்சுவைக் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு யதார்த்தமான நடிப்புடன், மேக்கப் இல்லாது படம் எடுத்தால் போதுமானது என்ற அளவில் பல கலைப்படங்கள் சுருங்கிப்போயின, நாம் ஏன் மேற்கத்திய மதிப்பீடுகளுக்கு மரியாதையளித்து நமது பாரம்பரியமான இசை மரபுகளை முழுவதுமாக அறுத்தெறிந்து விட்டு திரைப்படங்களைச் செய்ய வேண்டும்? இது எனக்கு ஒரு கேள்விக்குறியாக எப்பொழுதுமே இருந்து வந்துள்ளது.
இந்தப் புதிரை விடுவிப்பதாகவோ, பதில் அளிக்கக் கூடியதாகவோ அப்பொழுது எடுக்கப்பட்ட பல பரிட்சார்ந்த படங்கள் அமையவில்லை என்றார் நிகலானி.
பிரசாத் திரைப்பட அகாதெமியின் இயக்குனர் கே.ஹரிஹரன் தனது கேள்வி பதில் பகுதியின் பொழுது, ‘அறுபதுகளிலும் எழுபதுகளிலும் திரைப்படம் தனக்கான புதிய மொழியை அமைத்துக் கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில், குமார் சஹானி, மணிகௌல், இதற்கான முயற்சியில் இறங்கிய பொழுது, குருதத், ரிஷி கேஷ், ஷியாம், கோவிந்த் நிகலானி போன்றோர் middle cinemaவை நோக்கி பயணம் செய்தவர்கள். ரித்விக் கட்டக் தன்னைப் பெருமையுடன் ஐசன்ஸ்டீன் வழி வந்தவர் என்று பறைசாற்றிக்கொண்டு செயல்பட்ட திரைப்பட இயக்குனர், என்றும் ரித்வக்கிடம் பயிற்சி பெற்ற குமார் சஹானி, மணிகௌல், ஜான் ஆப்ரஹாம் போன்றோர், சினிமாவிற்கான புதிய இலக்கணத்தை உருவாக்கினார்கள் என்றும் நினைவு கூர்ந்தார். ஓர் உதாரணத்திற்கு, காட்சி பிம்பங்களின் முரண்பாடான செயல்பாட்டை முன்பின்னாக அடுக்கி படத்தொகுப்பின் மூலம் ஐசன்ஸ்டீன் ‘இன்டலெக்சுவல் மாண்டேஜ்’ வகை மாதிரியில் தொடங்கிய இயக்கம், பின்னாட்களில் அவரின் மானசீக சீடர்களான மணி, குமார் போன்றோர் அதனை தொடர் நிகழ்வாக, பரிட்சார்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றதும் உண்மை, என்றார். இந்தப் பாதையைத் தேர்வு செய்யாது, தனக்கென்று பாணியை அமைத்துக்கொண்டவர் கோவிந்த் என்று முடித்தார்.
நன்றி: திரை