சிறந்த மலையாள சினிமா -2019 : எங்களது தேர்வான வைரஸ் முதல் ஹெலன் வரை
- by தமிழில்-அமுதா-மாரியப்பன்
- 01 January 2020
இந்த ஆண்டு சில அறிமுக இயக்குநர்களால் பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன.
வரவிருக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு முதல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், டிரெய்லர் மற்றும் இறுதியாக படவெளியீடு வரை அனைத்தும் மிக வேகமாக கண்ணிமைக்கும் வேகத்தில் நடந்து முடிந்தன.
நீங்கள் பல மாதங்களாக ஒரு திரைப்படத்தைப் பற்றி நிறைய படித்தும் ஆய்வுகளை மேற்கொண்டும் பல விதமான தகவல்களைச் சேகரித்தும் அத்திரைப்படத்திற்காகக் காத்திருப்பீர்கள். ஆனால் ஆவலாக காத்திருந்த திரைப்படம் நீங்கள் எதிர்பார்த்த அளவு இருக்காது. பெரும்பாலான திரைப்படங்கள் வருவதற்கு முன்பு பல விதமான எதிர்பார்ப்புகள் மற்றும் மிகப்பெரிய ஆரவாரத்துடனும் வந்து எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் மிகக் குறுகிய காலகட்டத்தில் மறைந்துவிடும்.ஆனால், இது அத்தகைய ஆரவாரமாக வெளிவந்த திரைப்படங்களைப் பற்றியது அல்ல, அதிலிருந்து சற்று சிறந்தவை - மிக அமைதியாக வந்து உங்களை ஆச்சரியப்படுத்தியவை, அல்லது உங்களது எதிர்பார்ப்புகளை வெறுமனே பூர்த்திசெய்தவையாகவும், இவ்வுலகில் அன்றாடம் நாம் பார்த்துக் கடந்து வந்த சம்பவங்களைப் பற்றி உங்களுக்கு நன்றாக உணரவைத்தவைகளாகும். நீங்கள் இப்பட்டியலைப் பார்க்கும்போது, ஒரு பொதுவான படங்களின் வரிசையைக் கவனிக்கிறீர்கள்: இவற்றில் பெரும்பாலானவர்கள் அறிமுக இயக்குநர்கள். அவர்களால் மலையாள சினிமாவில் பல புதுவிதமான திரைப்படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன, அவர்கள் அனைவருக்கும் மலையாள சினிமா தகுந்த இடத்தையும், பாராட்டுக்களையும் தொடர்ந்து வழங்கிவருகிறது.இங்கே, எவ்வித குறிப்பிட்ட வரிசையிலும் இல்லாமல், சில திரைப்படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன:க
கும்பலங்கி நைட்ஸ்:
இத்திரைப்படம் கொச்சியில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் நான்கு ஆண்களைப் பற்றிய படம். உங்கள் அனைவரது இதயத்தையும் கொள்ளை கொண்டிருக்கிறது, மற்றும் சிறந்த நடிகர்களான சவுபின் ஷாஹிர், ஃபஹத் பாசில், ஸ்ரீநாத் பாசி மற்றும் ஷேன் நிகாம் போன்றவர்களின் திறமையான நடிப்பு இப்படத்திற்கு மேலும் வலுவைச்சேர்த்தது. எந்தவித பிரமாண்டமும், ஆரவாரமும் இல்லாமல் ஒரு சிதைந்த குடும்ப வாழ்க்கைக்குள் நம் அனைவரையும் அழைத்துச்செல்கிறார் புது முக இயக்குனரான மது சி நாராயணன். இந்நான்கு இளைஞர்களின் வாழ்க்கையையும், மறுபக்கம் சுருள் முடி கொண்ட அன்னா பென் மற்றும் சாந்தமான பெண்ணான கிரேஸ் ஆண்டனி என்ற இரண்டு சகோதரிகளின் வாழ்க்கையை இணைக்கும் கதையாகவும் உள்ளது. ஃபஹத் ஏற்றிருக்கும் ஷம்மியின் கதாபாத்திரத்தின் மூலம் ஆணாதிக்கத்தை புதிய வழியில் சியாம் புஷ்கரன் தனது எழுத்தில் சித்தரித்திருக்கிறார்.
ஜூன்:
இத்திரைக்கதையை மூன்று நபர்கள் எழுதியுள்ளனர் என நம்புவது கடினமாக உள்ளது. ஆம்,
லிபின் வர்கீஸ், அஹ்மத் கபீர் மற்றும் ஜீவன் பேபி மேத்யூ ஆகிய மூன்று பேரால் எழுதப்பட்ட கதை தான் ஜுன். இம்மூவரில் ஒருவரான அஹ்மத் கபீர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்குவதே சற்று கடினமாக உள்ள போது, இப்படத்தில் பதின்வயது சிறுமிகளின் ஒவ்வொரு நுட்பமான உடல் பாவனை, வெளிப்பாடு மற்றும் தன்னிச்சையான தன்மையை சரியாகப் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. படத்தில் கதாநாயகியின் பதின் வயது முதல் இருபது வயது வரையான வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் பதின்வயது நடவடிக்கைகளே படத்தில் நிரம்பியிருக்கின்றன. ராஜீஷா விஜயன் மற்றும் பள்ளியில் புதிதாகச் சேரும் இளைஞனும் அவர்களது வயதிற்கேற்ற கதாபாத்திரத்தினை ஏற்று தகுந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.உயரே:
மற்றொரு அறிமுக இயக்குனரான மனு அசோகன் கடினமான ஒரு கதாபாத்திரத்தைக் கதையில் வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இது ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய பெண்ணின் கதை. வெகு அரிதாகவே இதுபோன்ற கதைகள் எடுக்கப்படுகின்றன. கதாநாயகியான பார்வதி, தான் ஒரு விமான ஓட்டியாக வேண்டும் என்ற தனது சிறுவயது கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு எதிர்பாராதத் தாக்குதலுக்கு ஆளாகிறார். ஆசிப் அலி ஆதிக்கம் செலுத்தும் காதலனாக நடித்துள்ளார் மற்றும் டோவினோ பணக்கார கெட்ட பழக்கங்களுக்கு அடிமையான இளைஞராக ஆரம்பத்தில் இருந்தாலும், பின்பு தனது பழக்கங்களை மாற்றி சரிசெய்துகொள்கிறார். அவ்வாறாக இருந்தாலும் இக்கதை முழுக்க முழுக்க பார்வதியைச் சுற்றியே வருவதால் இது பார்வதியின் கதையே.
இஷ்க்:
அனுராஜ் மனோகர் இயக்கிய இஷ்க், கலாச்சாரக் காவலர்கள் மற்றும் மிகவும் மோசமான ஆண்மையச் சிந்தனை கொண்டவர்களால் வரும் பிரச்சினைகளைப் பற்றி பேசியதாக இருப்பினும், இந்தச் சூழலைக் கையாளுவதற்கு வெவ்வேறு விளக்கங்கள் உள்ளன. ஒருபுறம் ஆணாதிக்கத்திற்கு நடு விரலைக் காட்டிய காட்சி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டைப் பெற்றது. மறுபுறம், ஷேன் நிகாமின் குணாதிசயம், அவரது காதலியிடம் தவறுதலாக நடந்துகொண்ட கலாச்சாரக் காவலர் மீது தனது கோபத்தை எப்படி பிரதிபலிக்கிறார் என்பதற்கான விமர்சனம் இருந்தது. வில்லனாக நடித்திற்கும் ஷைன் டாம் சாக்கோ, நாம் அனைவரும் அறிந்த குழப்பமான கதாபாத்திரத்தில் பயணிக்கிறார், இக்கதையில் மிகவும் நெருக்கமான தருணங்களில் வெளிச்சம் அடித்துக்காட்டி, அவமானப்பட வேண்டிய சூழ்நிலைகளை எடுத்துரைத்துள்ளது.
தமஸா:
முதலில் இது ஒரு கன்னட திரைப்படம், அறிமுக இயக்குனரான அஷ்ரப் ஹம்ஸா மலையாளத்தில் ரீமேக் செய்துள்ளார். ஒரு வழுக்கை தலையை உடைய ஒரு மனிதன் அவரது ஒரு வாழ்க்கைத்துணையை கண்டுபிடிக்கும் முயற்சிகள் அடங்கிய கதை. கதாநாயகியும் அதிக உடல் பருமன் கொண்டவராக நடித்திருக்கிறார். அசாதாரண நம்பிக்கையால் சில எதிர்மறை விமர்சனங்களை அவள் கடந்துசெல்கிறாள். சமூக ஊடகங்களில் இதுபோல குண்டாக இருப்பவர்களையும், வழுக்கைத் தலையையும் கிண்டலடிப்பதன் உண்மையான சிக்கலை இந்தப் படம் மிகவும் திறம்படக்காட்டியுள்ளது.
வைரஸ்:
வைரஸ் திரைப்படம் பல எதிர்பார்ப்புகளுடன் வெளி வந்தது. மக்களிடையே சில தாக்கங்களை ஏற்படுத்தியதால், அத்தகைய எதிர்பார்ப்பு தோல்வியடையவில்லை. 2018 ஆம் ஆண்டில் கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட நிஜ வாழ்க்கை கதாபாத்திரங்கள் - ஹீரோக்கள் மற்றும் ஒரு சில நட்சத்திரங்களின் கூட்டமைப்பில் இயக்குனர் ஆஷிக் அபு இந்த உண்மைச் சம்பவத்தை திரைப்படமாக உருவாக்கப்போவதாக முன்பே அறிவித்திருந்தார். இத்திரைப்படத்தில் ரேவதி, பார்வதி, டோவினோ, ரிமா, குஞ்சாக்கோ போபன், ஸ்ரீநாத் பாசி மற்றும் சில நடிகர்களின் நடிப்பு உண்மையான கதையின் மறுகதையாடலாகத் திரையில் கொண்டு சேர்த்தன, இப்படம் நட்சத்திரங்களின் படங்களாக இல்லாமல் முழுக்க முழுக்க திரைக்கதையை மட்டுமே சார்ந்து உருவாக்கப்பட்டது.
உண்டா:
மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, காலித் ரஹ்மானின் இயக்கத்தில் மம்முட்டி கதாநாயக சாகசம் எதுவுமின்றி, சராசரி மனிதனைப் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேர்தல் பணிக்காக இளைஞர்கள் குழுவுடன் மாவோயிஸ்ட்களின் பகுதிக்கு அவர்களை அழைத்துச் செல்லும் காவலராக மம்முட்டி நடிக்கிறார். ஷைன் டாம் சாக்கோ, அர்ஜுன் அசோகன் மற்றும் லுக்மேன் போன்ற பல்வேறு திறமையான நடிகர்கள் சுவாரசியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். தனது அணியைப் பாதுகாக்கும் எஸ்.ஐ.யாக சிறந்த நடிப்பினை மம்முட்டி வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனமாயித்ரி:
படம் திரையரங்குகளில் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும், நகைச்சுவை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. மற்றொரு அறிமுக இயக்குனரான ஜான் மந்த்ரிகல் உங்களை சிரிக்க வைக்க எளிய முறையில், அதே சமயம் புத்திசாலித்தனமாகவும் திரைக்கதையை மிகச்சிறப்பாக நகர்த்திச் செல்கிறார். சில கேரள போலீசார் பொதுமக்களுடன் நட்பாக இருக்க ஒரு திட்டத்தைத் தொடங்க முடிவு செய்யும் ஒரு இரவின் கதையை இப்படம் சொல்கிறது. இரவில் வாகனம் ஓட்டும்போது பொதுமக்களுக்கு ஒரு கப் தேநீர் வழங்கினால் அவர்கள் தூங்க மாட்டார்கள் என்ற யுத்தியை பயன்படுத்தி நகைச்சுவையாக இக்கதை நகர்கிறது. இந்திரன்ஸ், சைஜு குருப், சபுமோன் மற்றும் விஜய் பாபு போன்ற நடிகர்கள் ஜனமாயித்ரி-யை இரண்டு மணிநேரம் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான திரைப்படமாக நடத்திச்செல்கின்றனர்.
தண்ணீர் மதன் தினங்கள்:
ஒரு பதின்வயது கதையைச் சொல்வது எளிதான வேலை அல்ல. ஆனால் அறிமுக இயக்குனரான கிரிஷ் அதை அழகாகச் செய்கிறார், இளம் வயதினர் அனைவரும் மிகப்பெரிய பிரச்சினையாக எதிர்க்கொள்வது பள்ளியில் புதிய ஆசிரியர் அல்லது காதல் ஈர்ப்பு போன்ற உண்மையான பதின்வயது பிரச்சினைகளைக் கையாள்கிறார், அவர்களின் உரையாடல்கள் அன்றாட விஷயங்களில் வேரூன்றியுள்ளன. மேத்யூ தாமஸ் மற்றும் அனஸ்வர ராஜன் ஆகியோர் பால்யகால அழகான ஜோடியாக நடித்துள்ளனர், வினீத் ஸ்ரீனிவாசன் சற்று வித்தியாசமான புதிய ஆசிரியராக நடிக்கிறார், அவரும்,மேத்யூவின் கதாபாத்திரமும் ஒருவருக்கொருவர் ஒற்றுப்போகாமல் கதை நகர்கிறது.
ஜல்லிக்கட்டு:
‘ஜல்லிக்கட்டு’ என்ற வார்த்தை திரைப்படத்தை விட மிக வேகமாகப் பயணித்து பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களிலும் அதிசயத்தை ஏற்படுத்தியது. இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரியின் அங்கமாலி டைரிஸ், ஈ.மா.யூ வுக்குப் பிறகு, அடுத்த படைப்பிற்கு முழு கேரளாவும் மிக ஆவலுடன் காத்திருந்தது. புதிய திரைப்படமான ஜல்லிக்கட்டில் ஒரு வித்தியாசமான சூழலில் சிக்கிக்கொண்டு தவிப்பது போல் உணரவைக்கிறார். மிருகங்கள் மற்றும் மனிதர்களின் உலகம் விலங்குகளிலிருந்து மிகவும் வேறுபட்டது இல்லை என்பதை மிக நேர்த்தியாக எடுத்துரைத்துள்ளார். செம்பன் வினோத், ஆண்டனி வர்கீஸ், சாந்தி பாலச்சந்திரன், சபுமோன் ஆகியோர் தப்பி ஓடிய எருமையைப் பிடிப்பதற்கான முயற்சியில் அக்கதாப்பாத்திரத்தினை மிக விறுவிறுப்பாக கொண்டுசென்றனர். மிகுந்த வேகத்தில் ஓடும் எருமையைப் பிடிப்பதில் நகர மக்கள் வெறிபிடித்தவர்கள் ஆகிறார்கள்.
மூத்தான் :
கீது மோகன்தாஸ் மலையாள சினிமாவுலகில் தனது மூத்தான் மூலம் சம பாலின உறவின் சிறந்த சித்தரிப்பை எடுத்துரைக்கிறார், லட்சத்தீவின் இருண்ட கடல்வெளியில் நிவின் பாலி மற்றும் ரோஷன் மேத்யூ ஒரு அழகான ஜோடியாக நடிக்கிறார்கள். இரவில் இருளும், பகலில் கடலின் நீலமும் ராஜீவ் ரவியால் மிக அழகாக பிரம்மிப்பூட்டும் விதமாக காட்சியாக்கப்பட்டிருக்கிறது. பல வருடங்கள் கழித்து, ஒரு குழந்தை தனது மூத்த சகோதரரை (மூத்தான்) ட்வீப்பில் இருந்து தொலைதூர தேசத்திற்குத் தேடிச் சென்று, ஒரு விசித்திரமான நகரத்தின் அபாயங்களில் சிக்கிக் கொள்ளுகிறான். சஞ்சனா திப்பு இளைய சகோதரர் போல மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார்.
ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் Ver 5.25:
சூரஜ் வெஞ்சராமுடு மற்றும் சவுபின் ஷாஹிர் இருவரும் அற்புதமான நடிகர்கள், ஒரு தந்தைக்கும்-மகனுக்கும் உண்டான உறவை அற்புதமாக சித்தரித்துள்ளனர், கிராமத்தில் ஒரு பெரிய வீட்டில் தந்தையும் மகனும் வசித்து வருகின்றனர். மகன் தனது வயதான தந்தையைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறார், வயதான தந்தைக்கு உதவ ஒரு ரோபோவை வீட்டிற்கு அனுப்புகிறார். வயதான சிடுசிடுப்பான மனிதனுக்கும் ஆச்சரியமூட்டும் ரோபோவிற்கும் இடையே ஒரு அழகான உறவு உருவாகிறது. அறிமுக இயக்குனரான ரத்தீஷ் பாலகிருஷ்ணன் போடுவால் இயக்கிய இத்திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமா புதிய கருத்துக்களை எப்போதும் வரவேற்கின்றன என்பதை நிரூபிக்கிறது.
ஹெலன்:
கும்பலங்கி நைட்ஸில் அன்னா பென் சிறப்பாக நடித்த போதும் பல திறமையுள்ள நடிகர்களின் நடிப்பினால் இவரது திறமையை நாம் கவனிக்க மறந்து விட்டோம். அசாதாரண சூழ்நிலையில் சிக்கியுள்ள ஒரு இளம் பெண் அச்சூழலிருந்து எவ்வாறு வெளிவருகிறாள்? அவளால் என்ன செய்ய முடியும்? என்பதே ஹெலனின் கதையாகும். அறிமுக இயக்குனரான மாத்துகுட்டி சேவியர் இயக்கிய இப்படத்தில் சுவாரசியமான பல முடிச்சுக்களை கையாண்டுள்ளார், அது அவ்வளவு எளிதல்ல. அன்னா பென் கதாபாத்திரத்தை திரைக்கதையிலேயே சிறிய நுணுக்கங்களுடனும் விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார். லால், அன்னா பென்னின் அப்பாவாகவும், அஜு வர்கீஸ் ஒரு மோசமான காவலராகவும், அவரது கதாபாத்திரம் பல தருணங்களில் பதட்டமான நிலையினை ஏற்படுத்துவதாக இருந்தாலும் பார்ப்பதற்கு ஒரு மென்மையான படமாக அமைகிறது.
க்ரிஷ்
தமிழில்: அமுதா மாரியப்பன்
நன்றி: thenewsminute
ம