LAMB - மரியாவும் ஆட்டுக்குட்டியும்
- by அகிலன்-லோகநாதன்
- 29 November 2021
-அகிலன் லோகநாதன்
இயற்கையினுடைய படைப்பில் பல்வகை உயிரினங்கள் இவ்வுலகில் வாழினும் தனக்கான தாய்மை உணர்வை எந்த உயிரினமும் விட்டுக் கொடுப்பதில்லை. தொலைதூரத்தில் குறைந்த மக்கள் வசிக்குமிடத்தில் மலைப்பாங்கான நிலப்பரப்பில் இங்வாரும் மரியாவும் வாழ்கின்றனர். தங்களுடைய பண்ணைகளில் ஆட்டுகுட்டி மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்தும் தங்களிடம் இருக்கும் நிலங்களை உழுது பயிரிட்டும் வாழ்கிறார்கள். இயல்பாகவே மலைப்பாங்காவும் தனிமையாகவும் வாழும் குறைந்த நபர்கள் அதிகம் பேசிக் கொள்வதில்லை. குறைவான வார்த்தை பரிமாற்றங்களும் புன்னகைப்பதுமே பரிமாற்றமாக நிகழ்கிறது. கால்நடைகளை நேர்த்தியாக பராமரித்தாலும் ஒருவித சோக மனநிலையுடனே வாழ்ந்து வருகின்றனர்.
இத்திரைப்படம் ஆட்டிகுட்டி மற்றும் மனிதனின் கலப்பு திகில்( Hybrid Horror) திரைப்படமாகும். கலப்பின வகைகளில் குறிப்பிட தகுந்த படமாக கருதப்படுகிறது. வால்டிமர் ஜோஹன்சன் இயக்கியுள்ள இத்திரைப்படம் மெதுவாக மற்றும் அழகியலுடனான திகிலை பார்வையாளர்களுக்கு கடத்துகிறது.
விவசாயம் செய்யும் இங்வாரும் மரியாவும் பண்ணையில் தாங்கள் வளர்க்கும் செம்மறி ஆடுகளின் பிரசவங்களை கவனிக்கிறார்கள். இது மரியாவின் உளவியல் சிக்கலுக்கு அடிப்படையாக அமைகிறது. செம்மறி ஆடுகளுடைய பல பிரசவங்களை பார்க்கும் மரியா தன்னுடைய குழந்தை அடாவின் பிரிவை ஆழமாக்குகிறது. கனவில் நிகழ்வது போன்ற ஆட்டுகுட்டி-மனித கலப்பு குழந்தை என்பது அதிர்ச்சி யாகவும் அவர்களுடைய உள்ளூர பயணம் உளவியல் ஏக்கமாகவும் உணர முடிகிறது.
இயற்கையான சுற்றுச்சூழலும் கதாபாத்திரங்களின் மனநிலையை உணர வைக்கும் வான்காட்சிகள் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன. கதைக்குள் நடக்கும் பிரிவை அதன் வலியை மென்மையாக கடத்துபவையாக அவை அமைகிறது. இங்வாரும் மரியாவும் சச்சரவுகள் ஏதுமின்றி இயல்பாக வாழ்ந்தாலும் அவர்களுக்கு பிறந்த 'அடா' என்ற குழந்தையின் இறப்பு அவர்களின் மகிழ்ச்சியை இழக்கச் செய்கிறது.
அவர்களுடைய பண்ணையில் விசித்திரமான ஒரு குழந்தையை செம்மறி ஆடு ஒன்று பெற்றெடுக்கிறது. அதன் உடலமைப்பை கண்டு இங்வாரும் மரியாவும் மிக ஆச்சர்யமாகவும் தாங்கள் இழந்த குழந்தையின் இழப்பிற்கு பதிலாக இறைவன் தங்களுக்கு அளித்த பரிசாக அக்குழந்தையை எண்ணுகின்றனர். கழுத்திலிருந்து உடல் முழுவதும் மனித உருவமாகவும் தலைபாகம் மட்டும் ஆட்டுகுட்டியின் தலையாகவும் விசித்திரமான உடலமைப்பை கொண்டிருந்தது.
இருவரின் துணையாக குடும்பத்தில் மூன்றாவது மனிதகுழந்தையாகவே அதை ஏற்றுக் கொள்கின்றனர். இயல்பாக ஒரு குழந்தையை வளர்ப்பது போல தொட்டிலில் உறங்க வைப்பதும் அதை குளிக்க வைத்து பால் ஊட்டுவதும் என குறைவில்லாமல் அன்பை வெளிப்படுத்துகின்றனர். மீண்டும் அவர்களுடைய வாழ்வில் மகிழ்ச்சியை உணரத் தொடங்குகின்றனர். மிக குறைவான ஆனால் நிறைந்த முக பாவனைகள் அவர்களுடைய மகிழ்ச்சியை கடத்துகிறது.
இங்வாரின் சகோதரர் பெட்டூரின் வருகை அவர்களுடைய மனநிறைவை பாதிப்பதாக அமைகிறது. அவர்கள் அந்த புதிய குழந்தையின் மீது வைக்கும் அன்பையும் அடா-வை கையாளும் விதமும் மிக வினோதமாக பார்க்கிறான்.
வாட் த பக்?' என இங்வாரினைப் பார்த்து பெட்டூர் கேட்கும் கேள்வி அவனை பொறுத்த மட்டில் அது ஒரு மரபணு மாற்றத்தில் உருவான ஒரு ஆட்டுகுட்டியாக அணுக செய்கிறது. பார்வையாளர்களின் சில கேள்வியாகவும் இதை காணலாம். ஆட்டுகுட்டியை மகளாக நினைத்து வாழ்ந்து வருவதை அனைவரும் முழுவதுமாக ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்க இயலாது. அதைக் கொல்ல நினைத்து ஒரு இரவில் தனியாக அழைத்து சென்றினும் அதன் இயல்பான அப்பாவித்தனமான முகத்தைக் கண்ட மனமாற்றத்தில் திரும்ப அழைத்து வந்து மடியில் உறங்கச் செய்கிறான். அதன் உருமாற்றத்தில் குறைகள் இருப்பினும் அவன்மீது அதனுள் இருக்கும் குழப்பமில்லாத நம்பிக்கை அடாவை கொல்வதற்கு விடவில்லை.
கதையில், மென்மையான இயற்கை உணர்வுகளில் கலந்திருக்கும் துப்பாக்கி என்பது அவர்களுடைய வாழக்கையை இடையூறு செய்வதும் பாதிப்பையும் இழப்பையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. கதையில் துப்பாக்கியினுடைய சத்தம் எப்பொழும் அச்சுறுத்தலை தருவதாக இருக்கிறது. தங்களுடைய தற்காப்புக்காக பயன்படுத்தும் ஆயுதம் உணர்ச்சிகளின் சிதைவால் அல்லது பயத்தால் இன்னொரு உயிரைப் பறிக்கவும் தூண்டுகிறது.
அடா அந்த வீட்டில் வாழும் நாயுடன் இயல்பாக விளையாடத் தொடங்குகிறது. இவ்விரு உயிர்களுக்கிடையே இருக்கும் உறவு என்பது உயிர் வகைமைகளின் வாழக்கையை பகிர்ந்து கொண்டு வாழும் தன்மையை குறிக்கிறது. மென்மையான அடாவினுடன் தொடர்புடைய காட்சிகள் வளர்க்கும் செல்லபிராணிகளின் மீது உள்ள அன்பை விட அதை குடும்ப உறுப்பினராக பாவித்து வளரும் குழந்தையாக பார்வையாளர்களாலும் உணரமுடிகிறது.
மரியாவை உடலுறவுக்கு இணங்க செய்ய பெட்டூரின் வற்புறுத்தலும் அதை அவள் கையாளும் முறைமையும் மிக முக்கியமானது. பெட்டூரின் பிடியிலிருந்து சாமர்த்தியமாக விலகும் மரியா அவளின் மீதான காமவெறிக்கு பியானோவை இசைத்து அந்த இசையை அவனுக்கு மருந்தாக தருகிறாள். உணர்ச்சிகள் மேலிட்ட தன்மையில் ஒருமனிதனை நெறி படுத்துவதும் மற்றவர்களின் மீதான வெறியை தாழச் செய்யும் இசையின் பங்கு மிக இயல்பாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.
அடாவை பெற்றெடுத்த செம்மறி ஆடு தன்னுடைய குட்டியை பின்தொடர்ந்து அடாவை தொடர்பு கொள்ள முயற்சிப்பது பிரிவையும் துக்கத்தையும் தருகிறது. மரியா தன்னுடைய முதல் குழந்தையின் இழப்பிற்கு பிறகு இறைவன் கொடுத்த பரிசாக நினைத்து அடாவை வளர்க்க நினைக்கிறாள். அதற்கு இடையூறாக வரும் தாய் செம்மறி ஆட்டை துப்பாக்கியால் சுட்டு புதைத்து விடுகிறாள். தாய்மை போராட்டங்களுக்கு நடுவே சிக்கும் அடா தான் வளர்க்கப்படும் அன்பினால் இங்வாரையும் மரியாவையும் நேசிக்கிறாள்.
இயற்கையின் இயல்பான உணவுச் சங்கிலி மாற்றத்தில் ஏற்படும் மரபணு மாற்றங்கள் எவ்வகையான இழப்பிற்கு எடுத்துச் செல்லும் என்ற கருத்து இருப்பினும் எவ்வகையான உயிர்தன்மையும் ஒன்றையொன்று நேசிக்கும் என்பதும் மறுபுறமிருக்கிறது. இறுதியில் வளர்ந்த மனித உருவத்தில் இருக்கும் செம்மறி ஆடு இங்வாரை சுட்டுவிட்டு அடாவை கூட்டிச் செல்கிறது. மரியா எடுத்து வளர்க்கும் அடாவினுடைய வலியை தான் காதலிக்கும் கணவனின் உயிரை எடுப்பதன் மூலம் அந்த பிரிவின் வலியை உணர்த்த செய்கிறது.
இயற்கையில் இரு தாய்மைக்கு இடையிலான போராட்டத்தில் வென்றது இயற்கை எனும் தாய் என்பதை அறிய இயலும். இயற்கையின் இயல்பான மாறுதல்கள் இல்லாமல் அதனுடைய விதிகளுக்கப்பால் ஏற்படும் கலப்பின் வெளிப்பாடு என்பது இயற்கைக்கு புறம்பான வாழ்வை வழிவகுக்கக்கூடும் என்ற கருத்தையும் பதிவு செய்கிறது. இயல்புக்கு அப்பாலான ஆற்றல் என்பது உணர்ச்சி நிலையை அடைகையில் ஏற்படும் இழப்பு சரிகட்ட முடியாத அளவிற்கு வலிநிறைந்ததாகவும் இயற்கையின் உயிர் சுழற்சியை அறுபட செய்வதாகவும் அமையலாம்.
ஆட்டுகுட்டியின் புதிய மனித உடலுடன் கூடிய ஆற்றல் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதை இவ்வாரும் மரியாவும் புறக்கணிக்க வில்லை. மேலும் ஒரு குழந்தையாகவும் நெருக்கமான உறவாகவும் மாறிப் போயிருக்கிறது. ஆட்டுகுட்டியை பிறந்த தாய் செம்மறி ஆடும் மரியாவும் ஒப்புமை யுடன் அணுக கூடியவர்களாக இருக்கின்றனர். தங்களுக்கு நெருக்கமாகவும் அன்பு நிறைந்ததாகவும் இருக்கும் உறவை இழப்பது உயிர்களுக்கு பொதுவான ஒன்றாக இயக்குனர் வெளிக் காட்டுகிறார். கட்டுகடங்காத உணர்வாகவும் தாங்கி கொள்ள இயலாமல் வன்முறைக்கு தூண்டும் உணர்ச்சியைக் நீளும் தன்மையையும் அறிய முடிகிறது.
துவக்கத்தில், தன் குழந்தையின் இழப்பினால் துக்கத்துடன் வாழும் மரியாவும் இங்வாரும் அழகானதொரு பயணத்தின் வழியாக அதிர்ச்சியூட்டும் வன்முறையையும் சந்திக்கிறார்கள். இதில் ஒருவருடைய இல்லாமல் போவதன் இடைவெளியும் இல்லாமல் போவதன் பிரிவின் வலியும் உணரமுடிகிறது. அடாவின் வருகைக்கு பின்னர் இயல்பான மனநிலைக்கு திரும்புவதை பல இடங்களில் காணமுடிகிறது. அதன் வெளிப்பாடாகவே மரியாவிற்கு இங்வாரின் மீதான அன்பும் கவனமும் அதிகமாகிறது. இருவருக்கும் நடக்கும் உடலுறவு என்பது இன்பம் நிறைந்ததாகவும் இருக்கிறது.
பிரிவிற்கு நிகரான இன்னொரு உயிரின் சேர்க்கை என்பது அன்றாட வாழ்வின் செல்லபிராணிகளையும் உள்ளடக்கியது. ஒரு பிரிவை ஈடுகட்டும் வகையில் முழுமையற்றது எனினும் அதேவேளையில் பிரிவை சமாதனபடுத்தவும் துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் இடத்தை இட்டு நிரப்புகிறது.